Thursday 22 January 2015

என்.ஆர்.ஐ.கள் கடன் வாங்குவது எப்படி?

வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து, பின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு, வாசல் கட்டும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே, வீட்டுக் கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டிவிடலாம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. என்.ஆர்.ஐகள் வீட்டுக் கடன் வாங்குவது மிகவும் கஷ்டம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், அவர்கள் வீட்டுக் கடன் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.

வங்கிகள் தாராளம்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க ரிசர்வ் வங்கி பொது அனுமதி வழங்கிய பிறகு, வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (National Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் கடன் அளிக்கத் தாராளம் காட்டுகின்றன. வீட்டுக்கடன் வழங்க உள் நாட்டு இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும் பின்பற்றப்பட்ட காலம் உண்டு.

ஆனால், வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மையான விதிமுறைகள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதன் காரணமாகவே என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் வங்கியாளர்கள்.

ஒரே விதிமுறைகள்

“உள்நாட்டில் ஒருவருக்கு எப்படி வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறதோ, அதேபோல்தான் வெளிநாடுவாழ் இந்தியருக்கும் வழங்கப்படுகிறது. உதாரணமாக மார்ஜின் தொகை (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே பின்பற்றப்படுகின்றன.

அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் மாறும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும்போது, வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன்.

ஆவணங்கள் என்ன?

உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கவே பல சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும்? என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்களைக் கூடுதலாகக் கேட்பார்கள். இவை தவிர்த்து உள்நாட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு

வீட்டுக் கடன் வழங்க என்னென்ன ஆவணங்களைக் கேட்பார்களோ அவற்றையெல்லாம் எ.ஆர்.ஐ.களிடமும் கேட்பார்கள்

திருப்பிச் செலுத்துவது எப்படி?

உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ.யை வங்கிக்கு நேரடியாகச் சென்றோ, இணையம் மூலமோ செலுத்திவிடுவோம். வெளி நாட்டில் இருந்துகொண்டு வீட்டுக் கடனை எப்படி அடைப்பார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கெல்லாம் நிறைய வழி இருக்கிறது.

“வெளிநாட்டில் இருந்தபடியே இ.எம்.ஐ. செலுத்த முடியும். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்குச் சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாகவே இந்தத் தொகை வங்கிக்கு வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்தலாம்.

இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம். கடனைத் திருப்பிச் செலுத்துபவருக்கு இதில் எது எளிதாக இருக்கும் என்று கருதுகிறாரோ அதைத் தாராளமாகப் பின்பற்றலாம்” என்கிறார் எஸ்.ஜி. கிருஷ்ணன்.

விரிவாக்கத்துக்கும் கடன்

என்.ஆர்.ஐ.கள் வீடு கட்டவோ, வாங்கவோ மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும் என்று கருத வேண்டாம். அவர் களுக்கு ஏற்கனவே உள்ள சொந்த வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும்கூட வங்கிகளிட மிருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடமிருந்தும் கடனுதவி கிடைக்கின்றன. இப்படி என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

எனவேதான் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் வீடு, மனைக் கண்காட்சிகளில் என்.ஆர்.ஐ.களைக் குறி வைத்தே நிறைய அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

Wednesday 21 January 2015

நீயும் ஓரு படைப்பாளி!

பிறர் எழுதியதை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எதைத் தருகிறது?

படைப்பு எதைத் தருகிறது என்பதிலிருந்து மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை அணுகலாம். படைப்பு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குதல். போலி செய்தல் அல்ல. படைப்பூக்கம் கொண்ட ஒரு நபர், தன் அனுபவங்களையும் பார்வையையும் தனக்கே உரிய கோணத்தில் வெளிப்படுத்து வதைப் படைப்பு என்று சொல்லலாம்.

படைப்பூக்கம் கொண்ட எழுத்து வாசிக்கப்படும்போது, அது தரும் பொருள் பல்கிப் பெருகுகிறது. கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிவுகொள்கிறது. ஒரு பிரதி பல பிரதிகளாக மாறுகின்றன. படைப்பில் ஒரு உரையாடல், ஒரு நிகழ்வு, ஒரு தருணம், சிந்தனைத் தெறிப்பு ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளைத் தரக்கூடியவையாக உள்ளன. ஒரே நபருக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருள் களையும் தருகின்றன. ஒரு கதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள் தரும் என்றால், அந்தக் கதையை ‘ஒரு’ கதை என்று எப்படிச் சொல்ல முடியும்? எழுதப்பட்ட கதை ஒன்றுதான் என்றாலும், வாசிக்கப்படும் கதை ஒன்று அல்ல. ஏனென்றால், அந்தக் கதை உள்வாங்கப்படும் விதம் ஒரே விதமானதல்ல. ஒரு கதை பல கதைகளாகப் பெருகுகிறது. சொல்லப்போனால், ஒவ்வொரு வாசிப்புக்கும் ஒவ்வொரு கதை. ஆக, ஒரு கதை எண்ணற்ற கதைகளாக விரிந்துகொண்டே போகிறது. முடிவற்ற இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவது வாசிப்பு. வாசிப்பு பெருகப் பெருகக் கதைகளும் பிரதிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

உயிர் கொடுப்பதே வாசிப்பு

இப்படிப் பார்க்கும்போது வாசிப்பின், வாசகரின் முக்கியத் துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பு வாசிப்பின் எண்ணிக்கைக்கும் வாசிப்பவரின் ஆளுமைக்கும் ஏற்ப விரிந்துகொண்டே போவதால், படைப்புக்கு உயிர் கொடுப்பதே வாசிப்பு என்று சொல்லிவிடலாம்.

படைப்பு என்பது தட்டையான செயல்பாடு அல்ல என்பதைப் போலவே வாசிப்பும் தட்டையான செயல்பாடு அல்ல. படைப்பைப் போலவே அது பன்முகப் பரிமாணங்கள் கொண்டது. ஒரே வாசகர் ஒரு படைப்பில் உணரும் ஓர் அம்சத்தை, பெறும் தரிசனத்தை இன்னொரு வாசகர் உணரவோ பெறவோ வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விதமான தரிசனத்தை இருவர் பெறுவதும் சாத்தியம் இல்லை. பல வித வாசிப்புகள், பல விதமான தரிசனங்கள்!

படைப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. அரிச் சந்திரன் கதை காந்திக்குக் கொடுக்கும் பொருள் அவர் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியது. ஷேக்ஸ்பியரின் ஆண்டனி ஆற்றும் உரை ஒரு தருணத்தின் மாயத் தன்மையை உணரவைத்து ஒவ்வொருவரது பின்புலத்துக்கும் ஏற்பப் பலவாறாக உருக்கொள்கிறது. ‘நான்கு தம்பிகளில் யார் உயிர் பிழைக்க வேண்டும் என விரும்புகிறாய்?’ என்னும் யட்சனின் கேள்விக்குத் தருமன் சொன்ன பதில், சமநீதியின் நிரந்தரச் செய்தியாக மனித ஆன்மாவில் தங்கியிருக்கிறது. குருதட்சணையாகக் கட்டை விரலைக் கேட்ட துரோணரின் குரல் சமத்துவ மறுப்பின் சாட்சியாகத் தங்கியிருக்கிறது. காஃப்காவின் ‘க’ கதாபாத்திரம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவற்றின் பின்புலங்களைத் தாண்டி உலகம் முழுவதிலும் நுண்ணுணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகத் தோற்றம் கொள்கின்றன. ‘நீரின்றி இருப்பது நதியின் பிழை அல்ல’ என லட்சுமணனிடம் ராமன் சொல்வது உலகின் எல்லா நதிகளுக்கும் எல்லா விதிகளுக்கும் பொருந்துகிறது. அரசனைப் பார்த்து கண்ணகி கேட்கும் கேள்வி, கண்ணகியின் கேள்வி மட்டுமல்ல. அன்றைய கேள்வி மட்டும் அல்ல. “இதுக்குத்தானா?” என்று மோகமுள் நாவலில், யமுனா பாபுவைப் பார்த்துக் கேட்ட கேள்வியின் எதிரொலி அதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். குற்றமும் தண்டனையும்குறித்து தாஸ்தாயெவ்ஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிகோவுக்கு எழும் மன நெருக்கடி காலம், இடம் தாண்டி அனைவரது மனங்களிலும் எழும். இதுதான் படைப்பின் மாயம்.

இந்த மாயத்தை நிகழ்த்துவது படைப்பாளி மட்டுமல்ல. வாசகரும் சேர்ந்துதான் இதைச் சாத்தியப்படுத்துகிறார். ஒரு படைப்பு பல தரிசனங்களாக, பல பிரதிகளாகப் பல்வேறு படைப்புகளாக மாறும் மாயத்தை, அதிசயத்தை நிகழ்த்து பவர்கள் வாசகர்கள்.

இரும்புக் கையின் உயிர்

‘இரும்புக் கை மாயாவி’என்னும் காமிக்ஸ் கதாபாத்திரத்தைப் பலர் அறிந்திருப்பார்கள். அந்த இரும்புக் கை பல ஆற்றல்கள் கொண்டது. ஒரு விரல் தோட்டாவைச் சுடும் திறன் கொண்டது. இன்னொரு விரல் விஷ வாயுவைப் பீய்ச்சும் ஆற்றல் கொண்டது. மின்சாரத்தைப் பாய்ச்சுதல், மரண அடி கொடுத்தல், தன்னைத் தாங்கியவரின் உருவத்தை மறைய வைத்தல் என மேலும் பல விதமான திறமைகள் கொண்டது அந்த இரும்புக் கை. அதைக் கழற்றித் தனியாகவும் இயங்க வைக்க முடியும். ஆனால், அதன் சொந்தக்காரர் நினைவிழந்து, செயலிழந்துவிட்டால் அதன் ஆற்றல்கள் எதுவும் பயன்படாது. இரும்புக் கை வெறும் கையாக இருக்கும். அதற்கு உயிர் கொடுக்கும் சாவி அதன் உரிமையாளரிடம் இருக்கிறது. அவரது பிரக்ஞையில் இருக்கிறது.

படைப்பும் அப்படித்தான். வாசிப்பின் ஸ்பரிசமே அதன் படைப்பின் வல்லமையை விகசிக்கவைக்கிறது. படைப்பைப் படைப்பாக உயிர்பெறச் செய்யும் சாவி வாசகர்களிடம்தான் இருக்கிறது. அவ்வகையில் வாசகர்களும் படைப்பாளர்களே.

ஒவ்வொருவரும் தனக்குள்ள படைப்பாற்றலை இனம்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் தனது வாழ்வையும் ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்வையும் மேம்படுத்த முடியும். எழுத் தாளர்கள் செறிவானவற்றைப் படைப்பதன் மூலமாகவும் வாசகர்கள் தங்களது ஆழமான வாசிப்பின் மூலமும் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். காத்திரமான வாசிப்பு பெருகப் பெருக ஒரு சூழலின் படைப்பாற்றலும் பெருகுவது சாத்தியமாகிறது.

#நன்றி_ஹிந்து.

Monday 12 January 2015

கண்டிப்பா சிரிப்பிங்க!

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்!அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!கடுப்பான குமார், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்!மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப்பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள்.அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

இஸ்ரேல்

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?
எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்க் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்.

Sunday 4 January 2015

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வெற்றி மொழி!

1879 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியல் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி. தனது மூன்று வயதுவரை சரியாக பேசமுடியாமல் அவதிப்பட்டார். நான்காவது வயதில் தன் தந்தையிடமிருந்து பெற்ற காம்பஸ் ஒன்றே, அவரை அறிவியலை நோக்கி அழைத்துச்சென்றது.
ஐன்ஸ்டீனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரின் ஆசிரியர்களே பயந்தார்கள் என்பது வரலாறு. 1905 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஐன்ஸ்டீன், ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக 1921 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
# மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
# அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
# மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.
# ஒரு விஷயம் ஆழமாக பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப்பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.
# புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.
# ஒருவரின் அனுபவமே அவரின் ஒட்டுமொத்த அறிவாற்றலின் ஒரே ஆதாரமாக கருதப்படுகிறது.
# ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்கமுடியாது.
# முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.
# தவறுகளே செய்யாத ஒருவன் இருக்கிறானென்றால், அவன் புதிதாக எதையுமே முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.
# நமது அணுகுமுறையில் உள்ள பலவீனமே, நமது கேரக்டரின் பலவீனமாக மாற்றம் பெறுகிறது. 

#தி_ஹிந்து!

2015-ன் இந்தியாவின் சவால்கள்!

நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இன்னொரு ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறோம். கடந்த ஆண்டு மனித குலம் செய்த சாதனைகள், சந்தித்த துயரங்கள் இரண்டின் தடங்களையும் மனதில் சுமந்துகொண்டு, 2015-ல் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டில் உலகமும் இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக இருக்கின்றன. கடந்த ஆண்டின் சவால்களில் பெற்ற வெற்றி - தோல்விகளில் கிடைத்த பாடங்களைக் கொண்டுதான் புதிய ஆண்டின் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
உலக அளவில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் முக்கிய மானவையாக நான்கைக் குறிப்பிடலாம்: 1. ஏகாதிபத்தியச் சுரண்டல், 2. அடிப்படைவாதம், 3. எபோலா, 4. புவிவெப்பமாதல். இந்த நான்கும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. மற்றவற்றின் எதிர் விளைவாகவோ துணைவிளைவாகவோ எழுந்தவை. இந்த நான்கு பிரச்சினைகளில் எபோலா மட்டும் சற்றுப் புதியது. புதிய பிரச்சினை என்றாலும் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினையாக எபோலா இருக்கிறது.
இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் நிறைய. உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் மேற்கண்ட நான்கு சவால்களையும் இந்தியாவும் தனக்கே உரித்தான வடிவங்களில் எதிர்கொள்கிறது. இது தவிரவும் முக்கியமான சில சவால்கள் இருக்கின்றன. மாற்றமும் வளர்ச்சியும் வேண்டும் என்று 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, மோடி தலைமையிலான பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் திசையை நோக்கிக் கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்த வேகத்தில் மோடி அரசு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. பிரிவினைவாத அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்கான உண்மையான வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியதே மோடி அரசுக்கு உள்ள சவால்.
இந்தியாவுக்குப் பழைய பிரச்சினைகள்தான் இன்னும் தீவிரத்துடன் தொடர்கின்றன. காஷ்மீர் பிரச்சினை, மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை, அதற்கு அடிப்படையான பூர்வகுடி மக்களின் மீதான சுரண்டல், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பிரச்சினைகளை இதுவரை முழுக்க முழுக்க ராணுவரீதியில் அணுகியதே தீர்வுகள் எட்டப்படாததற்குக் காரணம். சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிராந்தியங்களின் அடிப்படை உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டியது அவசியம்.
தமிழகம் ஒரு வகையில் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. செயல்படாத நிர்வாகம் மக்களுக்கு மட்டுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்துக்குமே பெரும் அபாயமாக உருவாகியிருக்கிறது. அரசின் செயல்பாடுகளில் விழுந்த விரிசலுக்கு ஓர் உதாரணமாக ஆண்டின் தொடக்கத்திலேயே போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை உருவாகியிருக்கிறது. தொழிலாளர்களை அடக்கி ஒடுக்க முற்படுவதைவிட, போராட்டத்தின் பின்னுள்ள நியாயங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு இதுபோன்ற விஷயங்களில் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் நடுவே சாதாரண மக்கள்தான் ஆச்சரியங்களைத் தருகிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளின் சுமைகளையும் அதிகமாகச் சுமப்பவர்கள் அவர்கள்தான் என்றாலும் வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிடிப்பும் வெகுண்டெழுந்து போராடும் குணமும்தான் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமக்குத் தொடர்ந்து அளிக்கின்றன. இந்தத் தன்னம்பிக்கைதான் மனித குலத்துக்கு ஆதாரம். 

#தி_ஹிந்து!

Saturday 3 January 2015

தமிழன் இலங்கை, மலேசியா மற்றும் பிற நாடுகளுக்கு குடி பெயர்ந்த வரலாறு!

தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் சொந்தமாக நிலம் வாங்க முடியாது, கல்வி கற்க வசதி கிடையாது. அவர்களுக்கென்று அரசு எந்த ஆவணங்களும் வழங்குவதில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு. நம்மூரிலேயே வேலைக்கேற்ற கூலி கேட்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்!
இலங்கைத் தமிழர் என்றாலே நமக்குத் தெரிந்தது ஈழத் தமிழர்கள் மட்டுமே. அதே அளவுக்கு நமக்கு மலையகத் தமிழர்களின் நிலை தெரியாமல் போனதுதான் வேதனை. இவ்வளவு பெரும் திரளான மக்களை எவ்வளவு வசதியாக நாம் மறந்துவிட்டோம். இவ்வளவுக்கும் அவர்களின் வரலாறு ஒன்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆன ஒன்றல்ல. அவர்கள் நம்மை விட்டுச் சென்று, இந்த தமிழ் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தச் சமீபத்திய வரலாறுதான் இனமான தமிழர்களாகிய நம் எல்லோராலும் மறக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்வு வரலாறு
இலங்கை 1815-ம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆளுகையின் கீழ் வந்தது. அந்த வருடமே இலங்கையின் விவசாயம், பாரம்பரிய உணவு உற்பத்தியிலிருந்து பணப் பயிர் விவசாயமாக மாற்றப்பட்டது. 1820-ம் ஆண்டு முதல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 1823 முதல் காபி உற்பத்தி தொடங்கியது. மதறாஸ் மாகாண அரசாங்கம், 1815-ல் தஞ்சாவூர் கலெக்டருக்கு தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களை அனுப்பக் கோரி ஒரு கடிதம் அனுப்பியது. கூலி அதிகம் வேண்டும் என்ற நிபந்தனையுடன் காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 150 தொழிலாளர்கள் 1828-ல் இலங்கை சென்றடைந்தனர். ஆனால், தோட்ட வேலை என்பது விவசாய வேலையைப் போல எளிதாக இல்லை. இதனால், ஒரு வருடத்துக்குள் அனைத்துத் தொழிலாளர் களும் இந்தியா திரும்பினர்.
1837-ல் இலங்கை காபித் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10,000. தொழிலாளர்களின் வருகையும், பின்பு தோட்ட வேலையின் கடுமை தாங்க முடியாமல் ஒப்பந்தத்தை மீறி, சொந்த ஊருக்கு ஓடிவிடுவதும் வாடிக்கையான நிகழ்வுகளாக இருந்தன. ஒப்பந்தத்தை மீறிச் செல்லும் தொழிலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க 1841-ல் பிரிட்டிஷ் இலங்கை அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சூழலில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வந்தது. 1839-ல் 3,000 என்று இருந்த எண்ணிக்கை 1844-ல் 77,000 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 1840 மற்றும் 1850-களில் ஒரு வருடத்துக்குப் புலம்பெயரும் தொழிலா ளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக இருந்தது. இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளே அதிகம்.
1911-ம் ஆண்டில் இலங்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அங்கு 1833 தோட்டங்கள் இருந்தன. அதில் 3,58,040 இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதில், 3,55,459 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றவர்கள். இலங்கைப் பதிவாளரின் அறிக்கையின்படி, 1915-ல் அங்கு வசித்த இந்தியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 6,28,300. இது 1931-ல் 7,90,376 ஆக உயர்ந்தது.
மேற்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து, இந்தியா விலிருந்து குறிப்பாக சென்னை மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தமிழர்களே அதிகமாகவும் அதில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளே அதிகம் என்பதும் உறுதியாகிறது. இவர்கள் ஏன் இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார்கள்?
புலம்பெயர்வின் சமூகப் பொருளாதாரப் பின்னணி
சாதிக்கும் நிலத்துக்குமான நேரடி உறவு, தீண்டாமை, 1840-களில் ஏற்பட்ட சில முக்கியமான சமூக / பொருளாதார / அரசியல் மாற்றங்கள்தான் தமிழகத்திலிருந்து பெருந்திர ளான தாழ்த்தப்பட்ட மக்கள் இலங்கை மற்றும் பிற நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்ததற்கு முக்கியக் காரணிகள். அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 மற்றும் சட்டம் வி-1843 நடைமுறைக்கு வந்ததையொட்டி, தொழிலாளர் கள் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வது எளிதாகியது. அதுவரை நிலவுடைமை அமைப்பில் இருந்துவந்த இறுக்கம் இந்தக் காலகட்டங்களில் தளர்வடையத் தொடங்கியது. நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து சற்றே விடுபட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதியினர் தங்களின் பொருளாதாரப் பின்னணியை உயர்த்திக்கொள்ளும் பொருட்டும், இங்கு நிலவிய சமூக இறுக்கங்களிலிருந்து விடுபடும் நோக்கத்தோடும் இலங்கை, மலேசியா, மொரீசியஸ், ஃபிஜி, பர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள்.
இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு இலங்கைத் தீவின் அண்மையும், மலிவான கப்பல் பயணமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன. இங்கிருந்து தனுஷ்கோடி துறைமுகத்தில் புறப்பட்டு, இலங்கையின் தலைமன்னார் துறைமுகத்தில் சென்று இறங்கினார்கள். இவ்வாறு நம்பிக்கையோடு இலங்கை சென்ற இந்த மக்களால் ஒரு தலைமுறையேனும் நிம்மதியாக வாழ முடிந்ததில்லை.
இவர்களின் தற்போதைய நிலை, எந்த விதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக இல்லை. இவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டாலும், காலத்தின் ஓட்டத்தில் இவர்களின் சந்ததியினர் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களாகவும், கண்டி, கொழும்பு போன்ற நகரங்களை அண்டிப் பிழைப்பு நடத்துபவர்களாகவும் உள்ளார்கள். இலங்கை யுத்தத்தில் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏனென்றால், இவர்கள் கடந்த 40 வருடங்களாக வன்னிப் பகுதியில் வாழ்ந்தாலும், இவர்களுக்கு நில உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழரின் பிரதிநிதிகள் இலங்கை அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களின் பிரச்சினைகள் ஜனநாயக அரசியல் மூலம் தீர்ந்துவிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும், ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினையும் மலையகத் தமிழரின் பிரச்சினையும் ஒன்றல்ல. ஆகவேதான், ஈழத் தமிழர்களின் அரசியல் சாயலை நாம் இவர்களிடம் தேடினால் அது நமக்குக் கிடைக்காது.
- ஜெ. பாலசுப்பிரமணியம், 

#தி_ஹிந்து!